sevanthi durai
Administrator
- Joined
- Mar 19, 2025
- Messages
- 754
- Thread Author
- #1
28
தயங்கினான் அக்னிமித்ரன்.
"நான் உண்மையை சொல்லட்டுமா.? பொய் சொல்லட்டுமா.?" என்று கேட்டான்.
தலையைப் பிடித்துக் கொண்ட நீலவேணி "தயவுசெஞ்சி உண்மையை சொல்லி தொலைங்க.." என்று கத்தாத குறையாக கேட்டாள்.
"நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன்.." என்று சொல்லிவிட்டு கட்டிலில் சென்று அமர்ந்தான்.
அழுகை ஒன்றுதான் வரவில்லை இவளுக்கு. ஆனால் ஆத்திரம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
"என்ன சொன்னாலும் கேட்பேன்னு சொல்லாதிங்க.? நீங்க என்னை லவ் பண்றிங்களா இல்லையா.? இதை மட்டும் சொல்லுங்க.." என்று கேட்டாள்.
"இங்கே விஷயம் அது கிடையாது. நீ என்கிட்ட நடிக்க தேவையில்ல. அது மட்டும்தான்.." என்றவனின் கன்னத்தில் பளாரென்று ஒரு அறையை விட்டாள்.
"நான் நடிக்கிறேன்னு உங்ககிட்ட எப்ப எழுதினேன்.?" என்று கோபத்தோடு கேட்டாள்.
"அப்படின்னா நீ என்னை லவ் பண்றியா.?" ஆச்சரியமாக கேட்டான்.
"ஏய் மெண்டல்.. நான் தண்டதுக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு நினைச்சியா.? என் அண்ணனோட காதலுக்கு நான் ஏன் பலி ஆகணும்.? உன்னை முழுசா நம்பினேன் பார்த்தியா.? என்னை செருப்பால அடிக்கணும். நீயெல்லாம் சுத்தமான ரோபோட்.. ஐ வாண்ட் எ மேன்! எந்த விஷயத்தையும் சுயமா முடிவெடுக்கறவன்தான் ஆம்பளை. நீ மணமேடைல கண்ணீர் விட்டதை பார்த்து சொன்னேன் பார்த்தியா.? அந்த வார்த்தை என்னவோ தப்புதான். ஆனா நீ இன்னும் மோசமானவன். உனக்கு மனுஷனா இருக்கும் தகுதியே கிடையாது. நாய்க்குட்டியோடு குடும்பம் நடத்தணும்ன்னு எனக்கு ஒன்னும் தலையெழுத்து கிடையாது.." என்று திட்டியவள் கட்டிலில் கடுப்போடு அமர்ந்தாள்.
"நீ கோபப்பட வேணாம் நீலா.. உனக்கு பிடிச்ச மாதிரி நான் நடந்துப்பேன். உன்னை எந்த விதத்திலும் நான் ஏமாத்த மாட்டேன்.." என்று சொன்ன மித்ரன் எழுந்து அவள் முன்னால் வந்து நின்றான்.
அவளின் கன்னங்களில் கைப் பதித்தான்.
அவனின் கையை தட்டி விட்டாள்.
"நீ என்னை காதலிக்கணும்ங்கற அவசியம் கூட கிடையாது. ஆனா நீ எனக்காக எந்த ஒரு விஷயத்தை செஞ்சாலும் அதை எனக்காக மட்டும் செய்யணும். அப்படி இருந்தாதான் அதுக்கு பேரு புருஷன் பொண்டாட்டிங்கற உறவு. உன் தங்கச்சிக்காக எல்லாத்தையும் செய்றேன்னு சொல்ற பார்த்தியா அதை கேட்கும்போது எனக்கு ரத்தம் கொதிக்குது. தங்கச்சிக்காக பொண்டாட்டிகிட்ட படுக்கிறவனுக்கு பேரே வேற.. என்னை ரொம்ப பேச வைக்காத.." என்று திட்டியவள் கட்டிலில் மறுபக்கத்தில் சாய்ந்தாள்.
"யாரோ நல்லா இருக்கணும்ன்னு என் வாழ்க்கை நாசமா போயிடுச்சி.." என்று புலம்பினாள்.
"மனசுல இருக்கிறதை வெளிப்படையாக பேசினா நான் கெட்டவ.. ஆனா என்னை பேச வைக்கிறது நீங்கதானே.?" என்று முணுமுணுத்தவள் கண்களை மூடினாள்.
கையை இறுக்கிக் கொண்டு உறங்க முயன்றாள். ஆனால் உறக்கம் வரவில்லை. மாறாக கண்ணீர்தான் வந்தது. மூடிய இமைகளில் இருந்து கீழே விழுந்த கண்ணீர் தலையணையை நனைத்தது.
"நீதானே சொன்ன, உன்கிட்ட பொய் சொல்ல வேணாம்ன்னு.. அதனாலதான் நான் உண்மையை சொன்னேன்? இப்படி நீ கோச்சிக்கிட்டா நான் என்ன பண்றது.?" என்று மித்ரன் சொல்ல, படக்கென்று எழுந்து அமர்ந்தாள்.
"அந்த ஒரு விஷயத்தை பொறுத்தவரைக்கும் நான் உனக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன். நல்ல வேளை உண்மையை சொன்னியே.. காலம் முழுக்க ஒரு நடிகனோடு வாழ்ந்திருந்தா அது இன்னும் மோசமாக இருந்திருக்கும்.." என்றாள் கடுப்போடு.
அவளின் கண்களில் இருந்த கண்ணீரை கண்டு பதறியவன் "நீலவேணி எதுக்காக அழற.?" என்று பரிவோடு கேட்டுக் கொண்டு அவளை நெருக்கினான்.
"என் பக்கத்துல வராத. அப்புறம் உன்னை கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போயிடுவேன். என் கண்ணீருக்கான காரணம் என்னன்னு உனக்கு மனசாட்சி இருந்தா அதுகிட்ட கேட்டு பாரு. அதுவாவது பதில் சொல்லும்.." என்றவள் அவனின் முகத்தில் இருந்த கவலையை கண்டுவிட்டு "இப்ப கூட என் கண்ணீருக்காக நீ பீல் பண்ண கிடையாது. என்னோட அழுகை உன் தங்கச்சியோட வாழ்க்கைக்கு ஒரு ஆபத்தா போயிடும்ன்னுதான் பயப்படுற.." என்றாள்.
பதில் சொல்ல முடியாமல் அவளின் முகம் பார்த்தான்.
"கவலைப்படாத. என்னால உன் தங்கச்சி வாழ்க்கைக்கு எந்த பிரச்சனையும் வராது.." என்று நம்பிக்கை சொன்னவள் "உண்மையிலேயே பாவ புண்ணியமெல்லாம் இருக்கான்னு தெரியாது. ஆனா இதுவரைக்கும் நான் என்ன பாவம் செஞ்சிருந்தாலும் அத்தனையும் உன்னை கல்யாணம் பண்ண அடுத்த செகண்ட் போயிருக்கும். என் பாவத்தோட ரொம்ப பெரிய தண்டனை நீ.. எத்தனை ஜென்மத்து பாவங்களோ அத்தனையும் ஒத்தை கயித்தால தீர்ந்துடுச்சி.." என்று தன் தாலி கயிறை தூக்கி காட்டினாள்.
மித்ரன் தனக்குள் உடைந்தான். உண்மையை சொல்லியிருக்க கூடாதோ என்று யோசித்தான்.
ஆனால் அவள்தானே நடிக்க வேண்டாம் என்று சொன்னாள் என்று தன்னிடமே கேட்டான்.
"ரொம்ப சீன் போடாத. உனக்கு நான் உன் காலடியில் இருக்கணும். அதுதானே திட்டம்.?" சில நொடிகளுக்கு பிறகு கேட்டான்.
கையெடுத்து கும்பிட்டாள் நீலவேணி.
"போதும் மகராஜா நீ என்னை புரிஞ்சிக்கிட்டது. இதுக்கு மேல நீ என்னை புரிஞ்சிக்க தேவையில்ல. தயவுசெஞ்சி என்னை தொந்தரவு பண்ணாம படுத்து தூங்கு.." என்று சொல்லியவள் போர்வையை எடுத்து தலையோடு போர்த்திக் கொண்டு உறங்க முயன்றாள்.
ஆனால் பின்னல் உறங்கவிடவில்லை. பின்னலில் இருந்த பூக்களும் கிளிப்புகளும் இன்னும் பல பொருட்களும் அவளை நெருடிக் கொண்டு இருந்தன. கழுத்திலிருந்த நகைகளும் அவளை எந்த பக்கமும் உறங்கவிடாமல் தடையாக வந்து நின்றன.
அரை மணி நேரம் முயற்சித்தவள் உறங்க முடியாமல் எழுந்து அமர்ந்தாள்.
மித்ரன் அதே இடத்தில் நின்று கொண்டு சிலை போல இவளை பார்த்துக் கொண்டிருந்தான். அவனை வெறித்தபடியே தனது பின்னலை கழட்டினாள்.
தலையில் இருந்த ஒவ்வொரு பொருட்களையும் தூக்கி தூர வீசினாள். கழுத்திலிருந்த நகைகளையும் கழட்டி அதேபோல வீசினாள்.
"என்ன பண்ற? இதெல்லாம் தங்க நகைகள்.." என்றவனை எரிச்சலோடு பார்த்தவள் "என்னோட கடுப்புக்கு நான் தாலியை கழட்டி வீசாம இருப்பதே பெரிய விஷயம். என்கிட்ட தேவை இல்லாம பேசாத.." என்றவள் கீழே இறங்கினாள்.
தான் உடுத்தியிருந்த புடவையை கழட்டினாள். அவனின் பார்வை வேறு திசைக்கு பயணப்பட்டது. மீண்டும் கண்ணீர் கசிந்தது இவளுக்கு.
ஜாக்கெட்டோடு இருந்த புடவை பின்னில் மாட்டிக்கொண்டது. கழட்ட முற்பட்டாள். அது முடியவில்லை. கோபத்தில் பிடித்து இழுத்தாள். புடவை கொஞ்சமாக கிழிந்து விட்டது. கிழிந்த சத்தம் கேட்டு இவள் புறம் திரும்பினான்.
"என்ன பண்ற நீ.?" என்றான் கலவரமாக.
"புடவையை கழட்டுறேன். இதுல உனக்கு என்ன வந்தது.?" என்றவள் புடவையை உருவி அவன் முகத்தில் விட்டெறிந்தாள்.
மிடறு விழுங்கியபடி இவளை பார்த்தான்.
"என்னை தயவுசெஞ்சி பார்த்துடாத.. சுயமா ஆசை ஏதும் வந்துட போகுது.." என்று கடுகடுத்தவள் அலமாரியை திறந்து இரவு உடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.
சில நிமிடங்களுக்கு பிறகு உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள்.
புடவை மடித்து வைக்கப்பட்டிருந்தது. நகைகள் மேஜையின் மீது இருந்தன.
'இவனுக்கெல்லாம் புடவை மடிக்க மட்டும்தான் தெரியும் போல..' என்று மனதுக்குள் சொல்லியபடி வந்து மீண்டும் கட்டில் படுத்தாள்.
'எப்படியும் இன்று இரவு உறக்கம் வராது. அழுது தொலைய வேண்டியதுதான்..' என்று தனக்குள் முனங்கி கொண்டவள் திரும்பிப் பார்த்தாள்.
"இப்ப எதுக்காக அங்கேயே நின்னுகிட்டு இருக்க.? வந்து தூங்கி தொலை.." என்று சிறு குரலில் எரிந்து விழுந்தாள்.
தயக்கத்தோடு வந்து கட்டிலில் அமர்ந்தான். "என் மேல கோபமா இருக்கியா.?" என கேட்டவனை கண்டு நகைத்தவள் "நானா அது எப்படி உன் மேல கோபப்பட முடியும்.? உரிமை இல்லாத ஒரு இடத்துல கோபப்பட யாராலும் முடியாது. உன்கிட்டயும் எனக்கு எந்த உரிமையும் கிடையாது.." என்றாள்.
அவள் வார்த்தைகள் அத்தனையிலும் கோபம்தான் இருந்தது. ஆனால் அந்த கோபத்தோடு கலந்து வந்த வேதனையும் அழுகுரலும் அவளுக்கு மட்டும்தான் தெரியும். மித்ரன் முகத்தை தேய்த்தபடி தலையணையில் விழுந்தான்.
"நான் எப்படி இருக்கணும்னு நீ விரும்புகிறாயோ அதுபோல இருப்பேன்.." அவன் மீண்டும் சொல்ல, "தயவுசெஞ்சி என்கிட்ட எதுவும் பேசாத. அதுதான் நம்ம இரண்டு பேருக்கும் நல்லது. அதையும் மீறி நீ எதையாவது ட்ரை பண்ணினா நான் நேரா போய் எதிர் ரூமை தட்டிடுவேன்.." என்று அவள் சொல்லவும், வாயை ஜிப் வைத்து தைத்தது போல மூடிக் கொண்டான்.
***
மதுரனின் முதுகை பார்த்தபடி கட்டிலின் மறு திசையில் கால்மாட்டு பக்கம் அமர்ந்திருந்தாள் மித்ரா.
அவன் உறங்கி இருக்கவில்லை இன்னமும்.
அவள் வேண்டியது அத்தனையும் குறைந்தபட்சம் ஒரு சாரி மட்டும்தான்.
ஆனால் தான் செய்தது தவறு என்றே நினைக்காத ஒருவனிடம் எப்படி சாரியை எதிர்பார்க்க முடியும் இவள்?
நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது.
காதல் என்று சொல்லி மனதை பறித்தவன் இப்போது கல்யாணமான பிறகு உயிரை வதைக்கிறானே என்று தனக்குள் நொறுங்கி விட்டாள்.
நடு இரவு நேரத்தில் எழுந்தான் மதுரன். மித்ராவை பார்த்தான். கால்மாட்டு பக்கம் முட்டிக்காலை கட்டியபடி அமர்ந்திருந்தவள் அப்படியே அரை தூக்கத்திற்கு சென்று விட்டிருந்தாள்.
எழுந்தவன் அவளின் தலையை உயர்த்தினான். அவளை தூக்கி கட்டிலில் சரியாக படுக்க வைத்தான்.
அவளுக்கு போர்வையை போர்த்தினான். அதே நேரத்தில் கண்களை திறந்து விட்டாள் அவள்.
"தூங்கு.." என்று அவளின் தலையை வருடியபடி சொன்னான்.
அவளின் விழிகள் அப்போதும் கலங்கியது.
"சாரி.." என்றான்.
அவளின் இதழில் புன்னகை பரவியது.
அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்.
"நீ இவ்வளவு நேரம் தூங்காம இருப்பன்னு நான் நினைக்கவே இல்ல.." என்றவன் அவளின் கன்னங்கள் முழுக்க தனது இதழ் பதித்தான். அவளின் கழுத்தில் முகம் புதைத்தான். அவனின் மூச்சுக்காற்று அவளின் கழுத்து முழுக்க பரவியது.
மித்ரா அவனின் சட்டையை பற்றினாள். அவனின் முத்தத்தால் தன்னை மறந்தவள் அவனின் சட்டை பட்டன்களை கழட்ட ஆரம்பித்தாள். மனதின் கவலையை இரவின் ஆசை மெல்ல மெல்ல விழுங்க ஆரம்பித்து விட்டது. தன்னோடு காலம் முழுக்க குப்பை கொட்ட போகிறவன். இவனின் ஆசைக்கு இப்போது மறுப்பு சொன்னால் பிறகு இதற்கும் ஏதாவது வம்பிழுத்து விடுவானோ என்ற பயமும் அவளின் இணக்கத்திற்கு ஒரு முக்கிய காரணம்.
அவளின் இதழ் பற்றியபடி அவளருகே விழுந்தான். அவளின் ஆடைகளுக்கு சுதந்திரம் கொடுத்தான்.
முத்தத்தில் இனிமை கண்டாள். அவனின் ஆசையில் வன்மை கண்டாள்.
தனது வெட்கங்களின் பூட்டுடைத்தாள். அவனின் தாபத்தில் தன்னை தீய்த்தாள்.
அவன் அவளின் சிணுங்கல்களில் தன்னை அறிந்தான். அவளின் மேனி வெம்மையில் தனது பல வருடத்து துறவை பறிகொடுத்தான்.
தன் ஆசைகளின் எல்லையைக் கண்டு பயந்தாள் அவள். அவளின் பயத்தை அழித்து இந்த ஆசைகளுக்கும் சிறகு உண்டு என்று காட்டினான் அவன்.
கட்டில் மேகமாய் மாறியது. தன்னோடு இருந்தவன் தேவனானான்.
கனவுகளுக்கும் நிஜத்திற்கும் இடைப்பட்ட ஒரு உணர்வை அடைந்தாள் அவள்.
அவளின் மறு பாதி தானேயென அவளுக்கு புரிய வைத்தான் அவன்.
தன் பின் கழுத்தின் வியர்வையில் பூத்த உப்பின் சுவையை அவனின் இதழில் கண்டாள் இவள்.
தன் மார்பு முடியில் ஒன்றிரண்டை அவள் கைவிரல்களின் நகத்தின் ஓரத்தில் பார்த்தான் அவன்.
தன் முத்தங்களால் சிவந்த அவளின் முகத்தை பார்த்தபடியே அவளின் அருகில் விழுந்தவன் அவளின் போர்வைக்கான வேலையை தானே பார்க்க ஆரம்பித்தான்.
அவளின் சிவந்த உதடுகளையும், சோர்வுற்ற முகத்தையும் கண்டவாறு தன்னோடு அணைத்துக் கொண்டான். "குட் நைட்.." என்றான்.
"தயவு செஞ்சி என் அண்ணன் மனசை உடைக்காதிங்க. ப்ளீஸ். என் அண்ணனும் நானும் இத்தனை வருஷமா ஒண்ணா வளர்ந்து இருக்கோம். எத்தனையோ இக்கட்டான சூழல்களை ஒண்ணா கடந்திருக்கோம். என் அண்ணன் எனக்கு ஒரு அப்பா மாதிரி. ஒரு நண்பன் மாதிரி.. அவன்கிட்ட இருந்து என்னை பிரிக்க நினைக்காதிங்க.." என்றாள் அவனின் நெஞ்சில் முகம் புதைத்தபடி.
அவளின் தோள்பட்டையின் மீது முத்தம் பதித்தவன் "உங்க இரண்டு பேரையும் என்னால எப்படி பிரிக்க முடியும்.? பிரியவே கூடாதுன்னுதானே ஒரே வீட்டுக்கு கல்யாணம் பண்ணி வந்திருக்கிங்க. என்னை வில்லன் போல நீ சித்தரிக்காத. உன் அண்ணனை நீ பார்க்க கூடாது பேசக்கூடாதுன்னு என்னால சொல்லவே முடியாது. ஏனா அவனும் இந்த வீட்டுல ஒருத்தன். நீதான் தேவையே இல்லாம எதையெதையோ யோசிச்சி என்னை டென்ஷன் ஆக்கற.." என்றான்.
புரிய வைத்தால் புரிந்து கொள்வான் என்று நம்பியவள் தன் நம்பிக்கையின் அச்சாணி அத்தனையும் விரைவிலேயே கழண்டு விழ போகிறது என்பதை அறியவில்லை இப்போது.
தொடரும்