அவளிடம் வழக்காட கூடாது என்றுதான் அவனும் நினைத்தான். ஆனால் அவனின் வாயும் ஒத்துழைக்கவில்லை. அவளும் தனது பேச்சை நிறுத்திக் கொள்ளவில்லை.
"தயவுசெஞ்சி கத்துறதை நிறுத்து. சண்டை போடுவதை விட்டுடு. எதுவா இருந்தாலும் இரண்டு பேரும் பேசி தீர்த்துக்கலாம்.." என்று அவன் சொல்ல, "இதை அடிக்கறதுக்கு முன்னாடி நீ சொல்லி இருக்கணும்.." என்றாள் நீலவேணி.
"அடிச்சது தப்புதான்.." என்று அவன் கூற "நீ என்னை அடிச்சதை வச்சி நான் உன் தங்கச்சிகிட்ட வம்பு பண்ணிடுவேன்னு பயப்படுற.. அதனாலதானே வந்து என்கிட்ட இப்படி பேசுற.?" என்றாள்.
இங்கே வக்கீல் நானா அல்லது இவளா என்று அவனுக்கே குழப்பமாகிவிட்டது. 'எந்த பக்கம் போனாலும் தடை போடுகிறாளே!' என்று அதிர்ந்தவன் "வேணி ஒரு அஞ்சு நிமிஷம் டைம் கொடு. நான் உன்கிட்ட பேசணும்.." என்றான்.
தனது கையை கட்டிக்கொண்டு அவனைப் பார்த்தாள் "பேசு.. என்ன பேசணுமோ பேசு.."
"என் தங்கச்சிக்காக நான் உன்னை கல்யாணம் பண்ணியிருக்கேன். அது உண்மைதான். என் தங்கச்சி வாழ்க்கைக்கு நீ தடையா வந்துட கூடாதுன்னு நினைக்கிறேன். அதுவும் உண்மைதான். ஆனா நான் உன்னை பிடிக்கலைன்னு ஒரு செகண்ட் கூட சொல்லவே கிடையாது. எனக்கு உன்னை பிடிக்கும். ஆனா அதையும் தாண்டி.."
கையை நீட்டி தடுத்தாள்.
"போதும் சாமி. நீ பேசியதே எனக்கு ரொம்ப குளிர்ச்சியா இருந்துச்சிடுச்சி. இதுக்கு மேல பேசாத.. அப்புறம் ஐஸ்ஸோட கூலிங் தாங்காம சளி பிடிச்சி ஜுரம் வந்துட போகுது.." என்று சொன்னவள் அலமாரியை திறந்து சுடிதார் ஒன்றை எடுத்துக்கொண்டு குளியலறையை நோக்கி நடந்தாள்.
உடையை கழட்டிவிட்டு குளிக்க ஆரம்பித்தவள் மனதின் வெம்மையை தண்ணீர் கொண்டு அணைக்க முற்பட்டாள்.
"பிடிக்கலைன்னு சொல்லலையாம்.. பேசுறான் பாரு பேச்சு.. டேஷ் மாதிரி. அவன் தங்கச்சிக்காகதான் இப்பவும் வந்து இதை சொல்லிக்கிட்டு இருக்கான்.. தங்கச்சி! தங்கச்சி! தங்கச்சி.! இவனை மாதிரி ஒரு தங்கச்சிதாசனை நான் உலகத்துல பார்த்ததே கிடையாது.." என்று புலம்பிக் கொண்டே குளித்தாள்.
அவள் குளித்து முடித்து விட்டு வெளியே வந்த போது குளியலறை வாசலில் நின்றிருந்தான் மித்ரன்.
கதவை திறந்தவள் அவனைக் கண்டு விட்டு பயந்து, நெஞ்சில் கையை வைத்தபடி ஓரடி பின்னால் நகர்ந்து நின்றாள்.
"இப்ப எதுக்காக பூதம் மாதிரி வந்து இங்கே நின்னுகிட்டு இருக்க.?" என்று எரிச்சலோடு கேட்டாள்.
"நான் ஒன்னும் பூதம் கிடையாது.."
"ஆமா இது கூட எனக்கு தெரியாது பாரு.." என்றவள் அவனை ஓரமாக ஒதுக்கி நிறுத்தி விட்டு அலங்கார மேஜையின் அருகில் சென்றாள்
இவன் பார்த்துக்கொண்டு இருந்த நேரத்திலேயே தலைவாரி முகத்திற்கு அழகு கூட்டிவிட்டு பொட்டிட்டு கொண்டவள் பர்ஃபியூமை கையில் எடுத்தாள்.
பர்ஃபியூமில் இருந்து காற்று கூட வரவில்லை.
"அதுக்குள்ள தீர்ந்து போயிடுச்சா.?" என்று பர்ஃபியூம்மை தூக்கி குப்பையில் எறிந்தவள் அருகில் இருந்த புது பாட்டிலை எடுத்தாள்.
மூடியை திறந்து வலது கையை மேலே தூக்கியவள் கையில் இருந்து இடுப்பு வரை அடித்தாள்.
பெர்ஃப்யூமின் வாசனை வேறு மாதிரி இருந்தது. நாற்றம் குடலை புரட்டியது. மதுரன் பெர்ப்யூமை முழுமையாக காலி செய்து இருக்கவில்லை. ஏற்கனவே அதில் வாசனை திரவியம் சிறிது இருந்த நேரத்திலேயே அதில் பினாயிலை கலந்திருந்தான். இரண்டும் கலந்து இன்னும் மோசமான துர்நாற்றமாக மாறியிருந்தது.
இவள் தன் மீது அடித்துக் கொண்டதும் அந்த வாசம் அந்த அறை முழுக்க நிரம்பியது
பற்களை கடித்தவள் திரும்பினாள்.
மித்ரன் அவளை சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
'ஒருவேளை இந்த மாதிரி வாசம்தான் இவளுக்கு பிடிக்குமோ.?' என்று யோசித்தான்.
அவளோ கதவை திறந்து கொண்டு வெளியே சென்றாள்.
"டேய் நாயே! என் அம்மா உன்னை பஜார்ல இருந்து பத்து ரூபாய்க்கு வாங்கிட்டு வந்தாங்கன்னு சொல்லும் போது கூட நான் நம்பவே இல்லை. ஆனா நீ அப்படிதான்னு நிரூபிச்சிக்கிட்டே இருக்க.." என்று கத்திக் கொண்டே எதிரியில் இருந்த அறையின் கதவை வேகமாக தள்ளினாள்.
***
மதுரன் அலுவலகம் செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தான். மித்ரா சமையலறையில் ஒத்தாசைகளையெல்லாம் முடித்துவிட்டு அப்போதுதான் அந்த அறைக்கு வந்தாள்.
இப்போது வேலைக்கு கிளம்பினால் திரும்பி வர மாலை வரை ஆகிவிடும். அதுவரை இவளை பிரிந்து இருக்க வேண்டுமே என்று வருந்திய மதுரன் பல் விளக்குவதற்கு சென்ற மனைவியை போகவிடாமல் தடுத்து தனது அணைப்பில் சிறை பிடித்து வைத்திருந்தான்.
"நான் பல் விளக்கணும்.." அவள் சிணுங்கலாக கூற "நான் ஆபீஸ் போன பிறகு விளக்கிக்க. எனக்கு இப்ப நீ வேணும்.." என்றவன் அவளையும் பின்னங்கழுத்தில் தனது இரு கைகளையும் பதித்தான்.
"ப்ளீஸ்ங்க கிஸ்ஸெல்லாம் வேணாம். நான் பல் விளக்கல. இது பாவம் போல ஆகிடும். ப்ளீஸ் வேணாம்.." என்று கெஞ்சினாள்.
"எதுக்கு இவ்வளவு கெஞ்சணும்? விடு பரவாயில்லை.." என்றவன் அவளின் கன்னத்தில் உதடு பதித்தான்.
முத்தமிட்டு கொண்டே அவளின் செவிகளை நெருங்கியவன் காதின் நுனியில் சின்னதாக கடித்து வைத்தான்.
காதல் சொரணை கெட்டது என்றால் மோகம் சூடும் சொரணையும் சேர்ந்து கெட்டது. அவனின் பற்கள் பதிந்துதான் தனது காது பிறவி பலனையே அடைந்தது போல தனக்குள் உணர்ந்து, மேனியில் பரவசம் கண்டு அவனிடம் இன்னும் சற்று நெருங்கி நின்றாள் மித்ரா.
அவள் மேனியின் நெளிவும், அவளின் குரலில் இருந்து குழைவும் அவனின் பயணத்திற்கு படிக்கற்களாக மாறின.
அவளின் மேனியில் காற்று போல அலைபாய்ந்தது அவனின் கரங்கள். அவளின் முகமெல்லாம் அவனின் இதழ் ஈரத்தால் வண்ணம் மாறியது.
"மித்ரா.." என்று அழைத்தவனின் குரலில் கந்தர்வ தேசத்து குழலிசையை கண்டாள் அவள்.
அவளிடம் இருந்து வந்த சின்ன சின்ன சிணுங்கல்களில் தன் உடம்பில் இருந்த அத்தனை ரத்த அணுக்களும் இரு மடங்கு வேகத்தில் வேலை செய்வதை உணர்ந்தான். அலுவலகத்தில் முக்கியமான வேலை இருந்தது. இல்லையென்றால் இது இரண்டு வாரங்களுக்கு இந்த படுக்கை அறையை விட்டு வெளியே கூடச் சென்றிருக்க மாட்டான்.
அவளின் கன்னங்களிலும் காதுகளிலும் சிவக்க சிவக்க முத்தமிட்டு விட்டு கழுத்திற்கு இடம் பெயர்ந்தவன் அவள் கழுத்து நரம்புகளில் தன் காதலின் விஷத்தை பற்களால் கடத்த முயன்ற நேரத்தில் அவர்கள் அறையின் கதவு படாரென்று திறந்து கொண்டது.
மித்ரா அவசரமாக இரண்டடி விலகிக் கொண்டாள்.
கதவை தாழிடாமல்தான் இவ்வளவு நேரம் கொஞ்சிக் கொண்டிருந்தோமா என நினைத்து தன்னையே நொந்து கொண்டான் மதுரன்.
இதயம் இருமடங்கு வேகத்தில் துடிதுடித்தது மித்ராவுக்கு. வெட்கம் உச்சந்தலையில் இருந்து உள்ளம் கால் வரை படபடப்பை தந்தது. சிறிது பயமும் உண்டாகி இருந்தது.
இவர்களின் எண்ணத்தையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கதவைத் திறந்து கொண்டு புயல் போல பாய்ந்து வந்தாள் நீலவேணி.
"கருங்காட்டு கத்தாழை வாயா.. கருங்குரங்குக்கு சேத்தாளியா போன செவ்வெறும்பு தலையா.. என்ன வெங்காயத்துக்காக என்னோட ரூம்குள்ள நீ வந்த.?" என கேட்டவள் அவன் பதில் சொல்லும் முன்பே தன் கையில் இருந்த பர்ஃபியூமை அவன் மீது ஊற்றினாள்.
அந்த அறைக்குள் நுழையும் முன்பே பர்ஃப்யூம் பாட்டிலின் மேல் பகுதியை கழட்டி வீசிவிட்டுதான் வந்திருந்தாள்.
பர்ஃபியூம் அவனின் முகத்திலிருந்து வயிறு வரை பரவியது. நாற்றத்தில் அவனுக்கும் குமட்டியது. நான்கடி தள்ளி நின்றிருந்த மித்ராவுக்கும் குமட்டியது.
அறையில் நடு நாயகமாக நின்று கொண்டிருந்தான் மித்ரன். நீலவேணி கதவை திறந்து கொண்டு வெளியே சென்றதும், நேராக எதிர் அறையை திறந்ததும், தன் தங்கை அவளின் கணவனிடம் இருந்து மயிரிழை நேரத்தில் விலகிக் கொண்டதும், இவள் சென்று பெர்ஃபியூமை அவன் மீது ஊற்றியதையும் பார்த்துக் கொண்டிருந்தவன் வேகமாக இவர்களிடம் ஓடி வந்தான். ஆனால் அதற்குள் காரியம் கைமீறிவிட்டது.
பர்ஃபியூம் தன் மீது ஊற்றப்பட்டதும் கடுப்பான மதுரன் நீலவேணியின் தலை முடியை பிடித்து விட்டான்.
"என் மேலயே இந்த கருமத்தை கொண்டு வந்து கொட்டுறியா? உன்னை இன்னைக்கு உடைச்சி ஊறுகாய் போடாம இருக்க போறது இல்லடி.." என்று கத்திக்கொண்டே அவளின் முடியை பிடித்து பலமாக இழுத்தான்.
அவள் மட்டும் சும்மா இருப்பாளா.? தனது இடக்கரத்தால் அவனின் தலை முடியை பிடித்து விட்டாள். பர்ஃபியூமால் நனைந்ததில் அவனின் தலை முடி பிசுபிசுத்துக் கொண்டிருந்தது.
அப்படி இருந்தும் கூட அவளின் கைவிரல்களுக்கு இடையே வாகாக சிக்கிக் கொண்டது அவனின் தலைமுடி. பேய் போல் பிடித்திருந்தாள். அவன் இவளின் முகத்தின் மீது கையை வைத்து தன்னிடமிருந்து தள்ள முயன்றான். அவள் தன் அண்ணனின் கழுத்தில் குத்தினாள். அவன் இவளின் கன்னத்தில் கிள்ளினான்.
"நாயே! பேயே! நாதேறி! சோமாரி! புல்டோசர் பல்லா! முதலை வாயா! பிசினரி நாக்கு! பிச்சைக்கார பக்கி.." போன்ற அற்புதமான வார்த்தைகள் அவளின் வாயிலிருந்து கொட்டின.
"குரங்கு மூஞ்சி! கொடூர பிசாசு! அரைவேக்காட்டு அழுமூஞ்சி.. சொறி நாய்! வெறி நாய்.!" போன்ற அழகான வார்த்தைகள் அவனின் வாயிலிருந்து கொட்டின.
இருவரும் மற்றவர்களை சாய்க்க காரணமாக இருந்தது அவர்களின் தலைமுடிதான். இருவரின் கரங்களும் மற்றவரின் தலைமுடியை இரும்பு பிடியாக பிடித்து வைத்திருந்தன.
கையே உடைந்தாலும் தலை முடியை விட போவதில்லை என்று முடிவெடுத்து விட்டார்கள் போல.
இவனின் நகங்கள் பட்டு அவளின் கன்னத்தில் ரத்தம் துளிர்த்தது. அவளின் நகங்கள் பட்டு இவனின் கழுத்தில் காயம் உண்டானது.
தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட மறந்துவிட்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
இரண்டு வெறி நாய்கள் கண்டிப்பாக தோற்றுவிடும் இவர்களின் சண்டையின் முன்பு.
எப்போதும் நால்வர் மட்டும்தான் இவர்களை சண்டையிலிருந்து பிரிக்க முயல்வார்கள்.
ஆனால் இன்று ஆறு பேர் கூடி நின்று பிரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒருவரால் கூட ஒருவரிடமிருந்து இன்னொருவரை பிரிக்க முடியவில்லை.
"அடேய் என்னடா பண்றிங்க.? விட்டு தொலைங்கடா.. சண்டை போடாதிங்க.." என்று அனுபமா கத்தி கொண்டு இருந்தாள்.
"என் செல்ல மருமகளை இப்படி பண்றானே.. என் செல்ல குட்டியை விடுடா.." என்று மதுரனின் பின்னால் நின்று அவனின் ஒரு பக்க தோளில் அடித்துக் கொண்டிருந்தாள் வெண்முகிலி.
அதே நேரத்தில் தன் மகளின் பின்னால் நின்று அவளின் ஒரு கரத்தை பற்றி பின்னால் இழுக்க முயன்று கொண்டிருந்தாள் இன்பா.
"ஆம்பள பையனை ஏன்டி இப்படி பாடா படுத்துற.? விட்டுத் தொலைடி.." என்று மகளிடம் திட்டிக் கொண்டிருந்தாள்.
மித்ரா ஒருபுறம் நின்று தன் கணவனை பின்னால் இழுக்க முயன்று கொண்டு இருந்தாள்.
மித்ரன் ஒருபுறம் நின்று தன் மனைவியை தன் பக்கம் இழுக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.
"இரண்டு பேரும் சும்மா இருங்க.." என்று அப்பா நடுவில் போக முடியாமல் கத்திக் கொண்டிருந்தார்.
மித்ராவுக்கு இவர்களின் சண்டை புதிதாக இருந்தது.
அவளுக்கு தெரிந்து எந்த அண்ணன் தங்கையும் இந்த அளவிற்கு சண்டை போட்டுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இல்லை.
இவர்களுக்குள் சண்டை வரும் என்று சொன்னபோது கூட அவ்வளவாக பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை மித்ரன். ஆனால் இன்று விஷயத்தைப் புரிந்து கொண்டவனுக்கு அநியாயத்திற்கு அதிர்ச்சியாக இருந்தது.
இருவரின் பிடிமானமும் அந்த தலைமுடிகளில்தான் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு தன் மனைவியின் தலையிலிருந்த மதுரனின் கையை பிடித்து பின்னால் இழுத்தான் மித்ரன். மற்றொரு கையால் நீலவேணியின் கையை பிடித்து இழுத்தான்.
அவனின் இந்த முயற்சி ஓரிரு நிமிடங்களுக்கு பிறகு வெற்றி பெற்றுவிட்டது.
இருவரையும் தனித்தனியாக பிரித்து விட்டார்கள்.
நீலவேணி தன் தந்தையின் புறம் பார்த்தாள். தந்தையின் அருகில் சென்று தனது கையை உயர்த்தினாள்.
"அந்த நாதாரி என் சென்ட்ல எதையோ கலந்து வச்சிட்டான்ப்பா. பயங்கரமா நாறுது பாருங்க.." என்றாள்.
அவர் ஏற்கனவே கோபமாக இருந்தார். காரணம் தெரிந்ததும் மகனின் அருகில் சென்று பளாரென்று ஒரு அறையை விட்டார்.